Sunday, January 18, 2009

பிரிவெதற்கு??

மனதில் நான் இல்லை என்றால்,
மணிப்பர்ஸில் என் படமெதற்கு??

நினைவில் நான் இல்லை என்றால்,
உன் விழியில் நீரெதற்கு??

கனவில் நான் இல்லை என்றால்,
பின்னிரவில் விழிப்பெதற்கு??

எங்கும் நானே தெரிந்தால்,நம் பிரிவெதற்கு??
வந்தெனைச் சேர்ந்திடு, விலகாமல் வாழ்வதற்கு!!

திருப்பிக் கொடு!!

நான் எழுதிய கடிதங்கள் வேண்டாம்,
கலைந்த என் கனவுகளைத் தந்து விடு;

என் புகைப்படங்கள் வேண்டாம்,
புன்னகையைத் திருப்பிக் கொடு;

உன் "நினைவுகளை" வேண்டாம்,
காதலை மட்டும் கொண்டு செல்!!!

எனது சொர்க்கம்!!

துரத்தும் அவன் நினைவுகள்,
மாறும் மனித உறவுகள்,

மாதம் பிறந்தால் இறுக்கும் பண நெருக்கடிகள்,
உயிர் உருக்கும் பல குழப்பங்கள்;

இவை எதுவுமே அங்கு இல்லையாம்;
அழைத்துச் செல் ஆண்டவனே
அந்த அழகான சொர்க்கத்திற்கு!!

Friday, January 16, 2009

வானிலை அறிக்கை!!

உலர்ந்து போன என் விழிகளைக் கண்டு
வறண்ட வானமும் மனமிறங்கியதோ??

"சென்னை"யிலே இடியுடன் கூடிய
பலத்த மழையாம்!!

அனாதையின் ஆறுதல்!!

யார் சொன்னது,
நான் அனாதை என்று??

இதோ நான் இறந்ததும்
எனக்காக அழுகிறதே;

ஆம்புலன்ஸ் சைரன்!!

எனது நண்பர்கள்!!

தலை கோதும் விரல்கள்,
நெற்றி நனைக்கும் இதழ்கள்,

சாய்ந்து அழுத தோள்கள்,
எனை மட்டுமே ரசிக்கும் குறு குறு கண்கள்;

பேசித் தீர்த்த இரவுகள்,
பேசாமலே கழிந்த பல நிமிடங்கள்;

அந்த அழகான நினைவுகளே,
இன்று எனது நண்பர்கள்!!

பிரிதலின் புரிதல்!!

அம்மாவின் அரவணைப்பு, அப்பாவின் ஆசிகள்,
உயிர்த் தோழர்களின் தோள்கள்;
இவை எதுவுமே எனக்கு கிடைத்திருக்காது,
உன்னை மறக்காதிருந்தால்!!

பிரிவின் தீரா ரணங்கள், மாறும் மனித முகங்கள்,
எனக்குள் ஒளிந்திருந்த கவிதை;
இவை எல்லாம் புரியாமலே போயிருக்கும்,
நீ பிரியாதிருந்தால்!!

வாழ்க உன் காதல் என வாழ்த்த வழியில்லை!!
வளரட்டும் உன் பிரிவின் தாக்கம்;
தொடரட்டும் இந்த துயரப் பாடம்!!

பிரியாதே நண்பா!!

உயிர்க்காதலும் அதன் வலியும் மறக்க,
உன் நட்பெனும் தோள் தந்தாய்;

இனி நான் உனை மறக்க,
எதைத் தருவாய் எனக்கு??

இன்னொரு பிரிவினைத்தாங்க
வலிவில்லை என் விழிக்கு;

விட்டுவிடு; உன் நினைவுகளை;
சுமந்து செல்கிறேன் அழகான கனவுகளாய்!!

கவிதையின் வித்து!!

எனக்குள்ளும் கவிதையா??
யோசித்தேன்..... "நீ" தெரிந்தாய்!!

காதலாய் அல்ல;
பிரிவின் வலியாய்!!

வினாடியின் நீளம்!!

பேசித் தீரவில்லை நமது கதைகள்;
கொடுத்துத் தீரவில்லை இதழ் முத்தம்;
பகிர்ந்து தீரவில்லை நம் காதல்;

ஆனால், இதோ முடியப் போகிறது நம் நேரம்;
இப்போது புரிந்தது ஒரு வினாடியின் நீளம்!!

என் முதற்கவிதை!!

உனக்கு என்னை பிடித்த பிறகுதான்,
எனக்கே என்னை பிடிக்கிறது;

நீ சொல்லிய பிறகே புரிந்தது,
நானும் அழகு தான் என்று;

எப்போது மாறினாய் நீ,
என் அகம் காட்டும் கண்ணாடியாய்????